திருப்போரூர், ஜூன் 7: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான கேளம்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் கபாலி (55). இவர் தனது சக ஊழியர்கள் கம்சலா, சாந்தி, உதயா, நாகம்மாள் ஆகியோருடன் நேற்று காலை கேளம்பாக்கம் ஊராட்சி சாத்தங்குப்பம் எஸ்ஆர்எஸ் நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த அதிமுக பிரமுகர் வினோத்கண்ணன் என்பவர், துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசி ஒழுங்காக குப்பை அள்ளுவதில்லை என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பணியாளர்கள், போதிய ஆட்கள் இல்லை என்றும், அதிகளவில் குப்பைகள் சேருவதால் உடனடியாக அகற்ற முடிவதில்லை என்றும், மாலைக்குள் அகற்றி விடுவதாகவும் கூறியுள்ளனர்.
அதற்கு, நடப்பது எங்கள் ஆட்சி, என்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று கேட்டு வினோத்கண்ணனும், அவரது தந்தை மனோகரன் என்பவரும் துப்புரவு பணியாளர் கபாலியை, அசிங்கமாகத் திட்டி அவரை எட்டி உதைத்தனர். இதனால் கீழே விழுந்த அவரை, சக பணியாளர்கள் தூக்கி நிறுத்தினர். இதையடுத்து காயமடைந்த அவருக்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.