மதுரை, ஜூன் 4: கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. புத்தகங்கள் முழுமையாக வழங்காததால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளில் ஆண்டு தேர்வு நடந்தது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் அனைத்தும் முடிந்தன. இதையடுத்து ஏப்ரல் 2வது வாரத்திலிருந்து, மே 31ம்தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் கோடை விடுமுறை முடிந்தது.
ஆனால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதன்படி நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மதுரையில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
பள்ளிகள் திறந்த அன்றே அரசு சார்பில் வழங்கப்படும் ேநாட்டு புத்தகங்கள், காலணிகள், பேக் உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் நோட்டு புத்தகங்கள், காலணிகள், பேக் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.இ குறித்து தலைமையாசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, `` நோட்டு புத்தகங்கள் முழுமையாக வரவில்லை. 6ம் வகுப்பு, 7ம் வகுப்புக்குரிய நோட்டு புத்தகங்கள் வந்து விட்டன. ஆனால், 8ம் வகுப்புக்குரிய புத்தகங்கள் வரவில்லை. இதேபோல், 9ம் வகுப்பு, 10ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் புத்தகம் வந்துள்ளது. 11ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம் புத்தகம் வந்துள்ளது. மற்ற புத்தகங்கள் வரவில்லை. வந்த புத்தகங்களை வழங்கினோம்’’ என்றார்.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``நோட்டு புத்தகங்கள் பிரிண்டிங் ஆகி வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது வரை வந்த புத்தகங்களை வழங்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வராமல் உள்ள ஒருசில புத்தகங்கள் பிரிண்டிங் ஆகி வந்ததும் உடனடியாக வழங்கப்படும்’’ என்றார்.