புதுக்கோட்டை, மே 30: எமிஸ் (கல்வித் தகவல் மேலாண்மை முறைமை) இணையதளத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா அறிவுறுத்தினார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா பேசியதாவது: நிகழாண்டுக்கான 6ம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது தமிழ் வாசிக்க செய்து ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு கற்பித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். மாணவர்களை பயன்படுத்தாமல் விழிப்புணர்வு பிரசாரம், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து அதிக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். அரசு பொதுத்தேர்வில் 80 சதவிகித தேர்ச்சிக்கு குறைவாக உள்ள மாணவர்களை தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும். நீட் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.