நாகை, மே 28: நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருக்குலைந்த நிலையில் இருக்கும் பொம்மைகளை சீர் செய்து அழகுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி முதல் அமலில் இருந்தது. இதனால் அரசு தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அதுபோல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் என்பதும் நடைபெறவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் யாரும் அதிக அளவில் வரவில்லை. அதே நேரத்தில் அரசு தொடர்பான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அதிக அளவில் அரசு சார்ந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் நாகை கலெக்டர் அலுவலகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று முதல் தளர்த்தி கொள்ளப்பட்டதால் இனிவரும் காலங்களில் வழக்கம் போல் எல்லா நிகழ்வுகளும் நடைபெறும். அப்படியிருக்கும் போது நாகை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அடிக்கடி நாகை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வருவார்கள். அப்படியிருக்கும் போது நாகை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உருக்குலைந்த நிலையில் யானை, மாடு ஆகிய பொம்மைகள் காணப்படுகிறது.
இந்த பொம்மைகள் எல்லாவற்றையும் சீர் செய்து அழகுபடுத்த வேண்டும். அதே போல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட மரங்கள் கஜா புயலின் போது சாய்ந்தது. இந்த மரங்களுக்கு மாற்றாக பலன்தரும் மரங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்க வேண்டும். நாகை கலெக்டர் அலுவலகம் மீண்டும் புதுபொலிவு பெற வேண்டும். அதே போல் கலெக்டர் அலுவலகம் முழுவதும் புறாக்கள் தங்கி அதன் எச்சில்கள் பட்டு ஒரே துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதையெல்லாம் அகற்றி புதிய வர்ணம் பூச வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்