குளித்தலை, மே28: குளித்தலை-மணப்பாறை ரயில்கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக தினந்தோறும் அதிகாலை முதல் இரவு வரை விரைவு ரயில்கள், பயணிகள் ரயில், விரைவு பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. அப்போது இந்த குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட் குறைந்தது 30 முறை மூடி திறக்கும் நிலை ஏற்படும் , அந்த சமயத்தில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் உண்டாக்குகிறது. ஒரு சில நேரங்களில் இரு மார்க்கத்தில் ஒரே நேரத்தில் ரயில்கள் வருவதால் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூட வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகனங்களில் வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.