திருவண்ணாமலை, மே 28: அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1008 கலச பூஜை நேற்று தொடங்கியது.திருவண்ணாமலையில் இந்த ஆண்டு அதிகபட்சம் 107.8 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இயற்கையின் சமநிலையற்ற தன்மை காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. மேலும், கோடை மழையும் கைகொடுக்கவில்லை.இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்படுகிறது.