இடைப்பாடி, மே 28: இடைப்பாடி அருகே 9 ஆண்டுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். மீனவர்கள் உதவியுடன் 4 மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஊராட்சி, ஒட்டப்பட்டியில் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துச்சென்று, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் போட்டு விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து, ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் விழாவை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவை நடத்துவதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர்கூட்டம் போட்டபோது, சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அருள்வந்து ஆடியுள்ளனர். அவர்கள், பழமையான அம்மன் சிலையை ஆற்றில் வீசியதால் தான், பருவமழை பொய்த்து ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வீசப்பட்ட அம்மன் சிலையை மீட்டு வந்து, கோயிலில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே, மழை பெய்து ஊர் செழிக்கும். ஐஸ்வர்யம் பெருகும் என அருள்வாக்கு கூறி விட்டு மயங்கி விழுந்தனர்.