திருவாரூர், மே 25: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்ப திருவிழா அடுத்த மாதம் 14,15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும் நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும் பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்ட விழா கடந்த மாதம் 1ம் தேதி நடைபெற்ற நிலையில் தெப்ப திருவிழா அடுத்த மாதம் 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.