நாகர்கோவில், மே 23 : ஆரல்வாய்மொழி அருகே உள்ள செங்கல்சூளையில் பணியாற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் இரண்டரை வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இளம்பெண்ணும், அவரின் 10 வயது நிரம்பிய மூத்த மகளும் மருத்துவமனையில் இருந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் தனது தாயாருடன், 10 வயது சிறுமி படுத்திருந்தார். அப்போது அந்த வார்டுக்கு காவலாளியாக இருந்த , நாகர்கோவில் நேசமணிநகர் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (24) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். திடீரென கண் விழித்த சிறுமியின் தாயார், மகளிடம் சுபின் செய்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக சுபின் சிறுமியையும், அவரது தாயாரையும் மிரட்டி விட்டு தப்பினார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்று விசாரணை நடத்தினர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவும் சென்று நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், சுபின் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். சுபின் மீது ஏற்கனவே குமரி மாவட்ட காவல் நிலையங்களிலும், கோவை மாவட்ட காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.