புதுக்கோட்டை, மே 23: தெற்கு ரயில்வே உணவகங்ளின் மீது ரயில் பயணிகளின் புகார்கள் தற்போது குறைந்துள்ளதால் நேரடி உணவு விற்பனையை ஐஆர்சிடிசி விரிவுபடுத்த வேண்டும் என டிஆர்இயூ ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தி யுள்ளது.தெற்கு ரயில்வே செயல்பாடுகள் குறித்த மறு ஆய்வு கூட்டம் புது டெல்லியில் கடந்த மார்ச் மாதம் ரயில்வே வாரியத்தில் நடந்தது. அதில் தெற்கு ரயில்வே கடந்த 2018-19 நிதியாண்டு 4 ஆயிரத்து 791 உணவக சோதனைகளை நடத்தியதையும், 2017-18 நிதியாண்டு உணவு தொடர்பாக 302 புகார்கள் பதிவாகி அபராத தொகை ரூ.13 லட்சத்து 95 ஆயிரம் தனியார் உணவகங்களிடம் வசூலானது, கடந்த 2018-19 நிதியாண்டு 118 புகார்கள் பதிவாகி ,அபராதத் தொ கை ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் வசூலானது பற்றியும் தெரிவித்தது.
ரயில் பயணிகளின் புகார்கள் குறைந்தது குறித்தும் ரயில்வே உணவு விற்பனைப் பற்றியும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:நாடு முழுவதும் 246 விரைவு ரயில்கள், 24 சதாப்தி, 19 தூரந்தோ , 12 ஹம்சா பர், 17 ராஜதானி, 15 ஜன சதாப்தி, தேஜாஸ் மற்றும் கட்டிமான் தலா ஒன்று என 335 ரயில்களில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் நேரடியாக உணவு விநியோகத்தில் ஈடுபடுகிறது. இது தவிர சாமானியர்கள் உணவகங்களான 53 ஜன் ஆதார், 167 புத்துணர்ச்சி நிலையங்கள் உட்பட 247 நிரந்த உணவு விற்பனை நிலையங்களையும் 307 புட் பிளாச கடைகளையும் நேரடியாக ரயில் நிலையங்களில் நடத்துகிறது. இதில் 191 கடைகள் ஐ.எஸ்ஒ தர சான்றிதழ் பெற்றவை.