சிதம்பரம், மே 23: சிதம்பரம்நடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் நடக்கும் ஆனி திருமஞ்சன திருவிழா வரும் ஜூன் மாதம் 29ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 தினங்கள் நடக்கும் திருவிழாவையொட்டி ஏராளமான வெளியூர் பக்தர்கள் சிதம்பரம் நகருக்கு வருகை தருவது வழக்கம். ஜூன் மாதம் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே சிதம்பரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. திருவிழா மற்றும் பள்ளிகள் திறப்பதையொட்டியும், சிதம்பரம் நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடப்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நடராஜர் கோயிலை சுற்றியுள்ள மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி, கீழவீதி பகுதிகளில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சன்னதிகளிலும் மக்கள் நடக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. நடைபாதைக்கு வெளியே இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.