திருவண்ணாமலை, மே 23: திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரணி மக்களவை தொகுதிக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் தலா ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதோடு, ஒவ்வொரு மையத்திலும் தலா 200 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இரண்டு மையங்களையும், வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகராஜன், எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.