நாமகிரிப்பேட்டை, மே 22: நாமகிரிப்பேட்டை பகுதியில் வாகனங்களில் விதிமுறை மீறி ஏர்ஹாரன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. நகரின் வளர்ச்சிக்கேற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெறிசல் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக நாமகிரிப்பேட்டை பகுதியில் இயக்கப்படும் டூவீலர் முதல் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய ஹாரன்களை பொருத்தும் வாகன ஓட்டிகள், நெரிசல் மிக்க சாலையில் முந்திச் செல்வதற்காக ஹாரன்களை தொடர்ந்து அடித்துச் செல்கின்றனர். மருத்துவமனை, பள்ளி, குடியிருப்பு என அவர்கள் கண்டுகொள்வதில்லை. திடீரென ஏர்ஹாரன்களை ஒலிப்பதால் சாலையில் நடந்து செல்பவர்கள் பீதிக்குள்ளாகி வருன்றனர்.