நாகர்கோவில், மே 22: ஆரல்வாய்மொழி அருகே உள்ள செங்கல்சூளை ஒன்றில் பணியாற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் இரண்டரை வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அந்த குழந்தையை கடந்த இரு நாட்களுக்கு முன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இளம்பெண்ணும், அவரின் 10 வயது நிரம்பிய மூத்த மகளும் மருத்துவமனையில் இருந்தனர். நேற்று முன் தினம் இரவு குழந்தைகள் சிகிச்சை வார்டு அருகே தனது தாயாருடன், 10 வயது சிறுமி படுத்திருந்தார். அப்போது காவல் பணியில் இருந்த தனியார் நிறுவன ஊழியர், சிறுமியிடம் அத்துமீறி அவருக்கு பாலியல் ெதால்லை கொடுத்தார். திடீரென திடுக்கிட்டு விழித்த சிறுமியின் தாயார், அந்த காவலாளியின் அத்துமீறிய செய்கையை பார்த்து கூச்சலிட்டார். அப்போது அவர் சிறுமியின் தாயாரை கொன்று விடுவதாக மிரட்டினார். இந்த சத்தம் கேட்டு மற்ற சிகிச்சை வார்டுகளில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள், பணியாளர்கள் வந்ததும், அந்த காவலாளி ஓட்டம் பிடித்து விட்டார். இந்த சம்பவம் நேற்று காலை காட்டு தீயாய் பரவியது. முதலில் ஆசாரிபள்ளம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமி விவகாரமாக இருப்பதால், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவளின் தாய், மருத்துவமனை பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபணமானது. இதையடுத்து அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர்மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இருப்பினும் அவரை தனியார் நிறுவனத்தினர் வேலைக்கு சேர்த்து உள்ளனர். இது பற்றி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விசாரணை 10 வயது சிறுமி பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா தலைமையில் அலுவலர்கள் மருத்துவக்கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடந்தது. அப்போது தாயார் கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து வந்து 10 ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் தான் உள்ளோம். 2 வது மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். நாங்கள் பிழைப்பு தேடி வந்து உள்ளோம். இங்கு யாரையும் எதிர்த்து போராட முடியாது. புகாரெல்லாம் வேண்டாம் என கூறினார். ஆனால் அதிகாரிகள் ஆறுதல் கூறி, நிச்சயம் நாங்கள் துணையாக இருப்போம். நீங்கள் தைரியமாக நடந்த சம்பவத்தை கூறுங்கள் என்றனர். இதை தொடர்ந்து தான் அந்த பெண் பேச தொடங்கினார். இது பற்றி குமுதா கூறுகையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த ஊழியரை முறையாக விசாரிக்காமல் சேர்த்துள்ளது. போலீசார் நன்னடத்தை சான்றிதழ் இல்லாமல் வேலைக்கு சேர்த்து உள்ளனர். இதனால் தான் அவர் மீது வழக்கு இருப்பது கூட தெரியாமல் இருந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை வார்டில் ஆண் காவலாளிகளுடன் பெண் காவலாளிகளையும் நியமிக்க வேண்டும் என்றார்.