ப்ரூக்பாண்ட் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

கோவை, மே.21: கோவை ப்ரூக்பாண்ட் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து ப்ரூக்பாண்ட் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேட்டுப்பாளையம் சாலையை சென்றடைகின்றன. அதோடு, ப்ரூக்பாண்ட் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கும் பொதுமக்கள் வந்து செல்வதால் எந்த நேரமும் அந்த சாலை பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை அந்த சாலை ஒரு வழிப்பாதையாக இருந்தது. பொதுமக்களின் நலன் கருதி, அச்சாலை சமீபத்தில் இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டது. தற்போது, மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடக்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், ப்ரூக்பாண்ட் சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை வாய்க்கால் மீது அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள சாக்கடை வாய்க்கால் மீது கான்கிரீட் தளம் அமைத்தால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அந்த கான்கிரீட் தளத்தை நடந்து செல்ல உபயோகப்படுத்தலாம். இதனால் சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் நடப்பது குறைவதோடு போக்குவரத்து நெரிசலும் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: