பெரியகுளம், மே 17: பெரியகுளத்தில் 60ம் வைரவிழா ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவங்கி நடந்து வருகின்றன. மே 21ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் தலை சிறந்த அணிகள் விளையாட உள்ளன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற உள்ளன. முதல் நாள் துவங்கிய போட்டிகளை விளையாட்டு வீரர் கவிஞர் து.சுப்பராயலு தலைமை வகித்து விளையாட்டுக்கொடியினை ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். கனரா வங்கி மேலாளர் நவீன் முன்னிலை வகித்தார். மின்வாரிய செயற்பொறியாளர் மாறன்மணி மின்னொளி இயக்கி வைத்தார். முதல் போட்டியில் செங்கோட்டை அணி 65 புள்ளிகள் பெற்று எதிர்த்து ஆடி 47 புள்ளிகள் பெற்ற பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியினை வென்றது. இரண்டாவது போட்டியில் திண்டுக்கல் அணி 62 புள்ளிகள் எடுத்து எதிர்த்து ஆடி 43 புள்ளிகள் எடுத்த வடுகபட்டி அணியினை வென்றது. 3வது ஆட்டத்தில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடைப்பந்து கழக அணி 79 புள்ளிகள் எடுத்து எதிர்த்து ஆடி 42 புள்ளிகள் எடுத்த தஞ்சாவூர் அணியினை வென்றது. நான்காவது ஆட்டத்தில் சேலம் திரிவேணி கூடைப்பந்து கழக அணி 54 புள்ளிகள் எடுத்து எதிர்த்து ஆடி 31 புள்ளிகள் எடுத்த தூத்துக்குடி டிபிஏ கழக அணியினை வென்றது.