தேனி, மே 17: தேனி மாவட்டத்தில் மே 19ம் தேதி நடக்க உள்ள இரு வாக்குச்சாவடிகளுக்கான மறு வாக்குப்பதிவுக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தேனி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் , ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம்தேதி நடந்தது. இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட தவறுகளை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் வாக்குச்சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் வாக்குச்சவாவடி எண் 197க்கும் வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.