திருவாரூர், மே 17: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என ஆர்டிஓ முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் இருந்து வந்த பேருந்து நிலையம் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நிலையில் தற்போதைய மக்கள் தொகை மற்றும் பேருந்துகள் எண்ணிக்கை அடிப்படையில் இட நெருக்கடி ஏற்பட்டது. எனவே புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு ரூ.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலம் வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் பயணிகளுக்கு பலனில்லாமல் இருந்து வருகிறது. காரணம் திருவாரூரிலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேரூந்து நிலையத்திற்குள் வராமல் வழியில் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகிலேயே பயணிகளை இறக்கி விடுவதும், திருச்சி, தஞ்சை, மதுரை மற்றும் கும்பகோணம், மன்னார்குடி போன்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வந்ததாலும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதிப்படும் நிலை இருந்து வருகிறது.