பாடாலூர், மே 17: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பலியானார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசபெருமாள் (69). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று மாலை பாடாலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.