நாமக்கல், மே 10: நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில், மழை வேண்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி, இந்த சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில், நேற்று மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. நரசிம்மர் சுவாமி மற்றும் தேவி பூதேவி ஆகிய உற்சவர் சிலை வைக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கிரீடம் வைத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.