கவுண்டமா நதியில் கொட்டப்படும் ரயில்வே மண் கழிவுகள்

திருமங்கலம், மே 9: இரட்டை ரயில்பாதை பணிக்காக தோண்டப்படும் மண் உள்ளிட்ட கழிவுகள் சிவரக்கோட்டை கவுண்டமாநதியில் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையில் இரட்டை அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது திருமங்கலம்-விருதுநகர் இடையே நடைபெறும் இந்த பணிகள் சிவரக்கோட்டையில் நடந்து வருகிறது. இரண்டாவது வழித்தடம் அமைக்க பல்வேறு பகுதிகளிலிருந்து மண் எடுத்து வரப்படுகிறது. இதனை சுத்திகரித்து பிரித்தெடுத்து தரமான மண்ணை ரயில்வே வழித்தடத்தில் கொட்டி விட்டு வீணாகும் மண் கழிவுகளை அருகேயுள்ள கவுண்டமாநதியில் ஊழியர்கள் கொட்டி வருகின்றனர்.

கவுண்டமாநதியில் பல மீட்டருக்கு கழிவுகள் கொட்டப்படுவதால் நதியின் பாதை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை துவங்கும் காலங்களில் மண் கழிவுகளால் நதியில் தண்ணீர் பெருக்கெடுத்தால் அதன் போக்கு மாறும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே கவுண்டமாநதியில் கொட்டப்படும் கழிவுகளை உடன் அகற்றவேண்டும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: