சிவகங்கை, மே 9: சிங்கம்புணரி அருகே, கரிசல்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில், மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரினர். இது தொடர்பாக, தேவகோட்டை ஆர்டிஓ அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டார். இதில், மஞ்சு விரட்டுக்கு அனுமதி கோரிய பகுதி, குடியிருப்பு நிறைந்த பகுதியாகவும், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட எஸ்பியும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு மஞ்சுவிரட்டு நடத்த ஆட்சேபனை தெரிவித்துள்ளார். எனவே, கரிசல்பட்டி கிராமத்தில் நாளை (மே 10) மஞ்சுவிரட்டு நடத்த அரசால் அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை.