தூத்துக்குடி, மே 8: தூத்துக்குடி, எட்டயபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019-20ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 2019-20ம் கல்வியாண்டிற்கு நேரடி 2ம் ஆண்டு, முதலாமாண்டு பட்டயப்படிப்பில் சேர 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கருவியியல் மற்றும் கட்டுபாட்டுத்துறை, கணினிப் பொறியியல், ஆடைத் தொழில் நுட்பவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை இக்கல்லூரியிலும் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் பெற்று பூர்த்தி செய்து நேரடி 2ம் ஆண்டு விண்ணப்பங்களை 10.05.2019 மாலை 5.45க்குள்ளும், முதலாமாண்டு விண்ணப்பங்களை வரும் 17ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கல்லூரி முதல்வருக்கு சமர்ப்பிக்கவேண்டும். மேலும் தொடர்புக்கு முதல்வர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 3-வது மைல் பாளையங்கோட்டை (சாலை) தூத்துக்குடி- 628008 என்ற முகவரியிலும், 0461 2311647 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். முதல்வர், எட்டையபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரியிலும், 04632 271238 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.