நாகர்கோவில், மே 8: குமரியில் அட்சய திரிதியையொட்டி தங்க நகைகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திரிதியை அட்சய திரிதியை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் வாழ்வுக்கு தேவையான பொருட்களை வாங்கினால் அது வாழ்நாள் முழுவதும் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும். கடந்த சில வருடங்களாக அட்சய திரிதியை நாளில் பொதுமக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் நேற்று (7ம்தேதி) அட்சய திரிதியையொட்டி நகைகள் வாங்க ஏராளமானவர்கள் குவிந்தனர். தங்கம் கிராம் ஒன்றுக்கு 3000 ஆக இருந்தது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.43 ஆக இருந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் காலையிலேயே வாடிக்கையாளர்கள் குவிந்தனர். மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நகை கடைகளில் நேரம் செல்ல, செல்ல வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்தது. கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல நகை கடைகளிலும் காலை முதலே வாடிக்கையாளர்கள் வர தொடங்கினர். வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை நகை கடைகள் செய்து இருந்தன.