சுசீந்திரம், மே 8 : அற நிலையத்துறை உத்தரவுப்படி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று மழை வேண்டிய வருண யாகம் நடந்தது. நந்தி பகவானுக்கு தொட்டி கட்டி நீர் நிரப்பி பூஜைகள் நடத்தினர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. பல்வேறு இடங்களில் குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மழைக்காக யாகம் நடத்த கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. கோயில்களில் உள்ள நந்தியை சுற்றி தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு, சிவாலயங்களில் சிவனுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் வழிபாடு, விஷ்ணு கோயில்களில் சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடத்த அறநிலையத்துறை அறிவுறுத்தி இருந்தது. மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யுமாறும், வருண காயத்ரி, வருண சூக்த வேத மந்திரங்களை பாராயணம் செய்யவும் அறிவுரை வழங்கி இருந்தனர்.