வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய அண்ணன், தம்பி கைது

திருச்செங்கோடு, மே 7:  திருச்செங்கோடு  தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் பழைய கரியாம்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர்   சின்னதம்பி(33). இவரது தம்பி கார்த்தி(28). இவர்களது   பக்கத்து வீட்டில் சித்ரா(40) என்பவரும், அவரது மாமியார் வீரம்மாள்(65)  என்பவரும் வசித்து வந்தனர்.

இரு குடும்பத்தினருக்கும் இடையே, கோயில்  திருவிழாவின் போது  பிரச்னை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று, குடிபோதையில் சித்ராவின் வீட்டிற்கு சென்ற சின்னதம்பி மற்றும்  கார்த்தி ஆகிய இருவரும், வீட்டில் இருந்த  வீரம்மாள், சித்ரா  ஆகியோரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

இதில் வீரம்மாளின் கை  முறிந்தது. சித்ராவுக்கும் காயம்  ஏற்பட்டது.  இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, ஈரோடு அரசு  மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து  சின்னதம்பி, கார்த்தி ஆகிய  இருவரையும் கைது செய்து,  திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.  இருவரையும் 15 நாள்  காவலில் வைக்கும்படி, நீதிபதி  தனம்  உத்தரவிட்டார்.

Related Stories: