கொள்ளிடம், மே 7: கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மண்டி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய மற்றும் சிறந்த துறைமுகமாக இருந்து வருகிறது. இத்துறைமுகத்தின் மூலம் தினதோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள், பைபர்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். துறைமுக வளாகத்திலும், துறைமுகத்திலும் பல்வேறு பணிகளில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துறைமுகம் மீன்பிடி துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் சுத்தம் சுகாதாரத்தை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்தத் துறைமுகத்தின் நுழைவாயிலின் முன்பகுதியிலேயே சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் சிலை உள்ளது. இந்தச் சிலை அருகே குப்பைகள் குவியலாகக் கொட்டப்பட்டு சுகாதாரமின்றி காணப்படுகிறது. நுழைவாயிலின் முன்பகுதியிலேயே சீமைக்கருவேல முட்செடிகள் வளர்ந்து புதராக மண்டி கிடக்கிறது.