திண்டுக்கல், மே 3: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி செல்லாத குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. 18 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. எனினும் ஒரு சில குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் ஆயிரத்து 50 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 20 மையங்களில் சேர்த்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் 1,024 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.