நாகர்கோவில், ஏப்.30 : சுசீந்திரம் அருகே நடந்த மீனவர் கொலை வழக்கில் வேகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொலையாளிகளுக்கு விரைவில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கொலை ெசய்யப்பட்டவரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மேலமணக்குடியில் நடந்த மீனவர் வின்சென்ட் கொலையில், மேல மணக்குடியை சேர்ந்த லாடஸ் (47), அவரது மூத்த சகோதரர் அந்தோணி (49), லாடஸ் மகன்கள் நிதில், அகில் மற்றும் ஜஸ்டின், அஸ்வின் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கீழமணக்குடியை சேர்ந்த கிதியோன் மற்றும் மேலமணக்குடியை சேர்ந்த பாண்டியன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளம் பகுதியை சேர்ந்த சகாயராஜ் (46) என்பவரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏற்கனவே வின்சென்ட் கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த கிதியோன் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கிதியோனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாண்டியன் என்பவரும் கைது செய்யப்பட்டார். வின்சென்ட் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த 8 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். கடைசியாக கைதான கிதியோன், பாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.