உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மகன் அழைத்து செல்லாததால் மூதாட்டி விஷம் தின்று சாவு

மன்னார்குடி, ஏப்.25:  திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (65). இவரின் கணவர் கல்யாணசுந்தரம் தற்போது உயிரோடு இல்லை. இவர்களுக்கு பக்கிரிசாமி உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகி  அப்பகுதியில் அருகருகில்  வசித்து வருகின்றனர். சுந்தராம்பாள் தனது மகன்கள் வீட்டில் மாறி மாறி  தங்கி யிருந்தார். கடைசியாக தனது  மூத்த மகன் பக்கிரிசாமி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 ம் தேதி பக்கிரிசாமி தனது தாயார் சுந்தராம்பாளை வீட்டில் தங்க வைத்து விட்டு உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேசத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார். வயது முதிர்வு காரணமாக சுந்தராம்பாள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் தனிமையில் இருந்த அவர் உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேசத்திற்கு செல்ல முடியாத ஏக்கத்தில் அருகில் இருந்த கடைக்கு சென்று எலி பேஸ்டை வாங்கி தின்றுள்ளார்.

மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த பக்கிரிசாமி தனது தயார் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு  மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுந்தராம்பாள் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துபோனார். இது குறித்து பக்கிரிசாமி கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை இன்ஸ்பெக் டர் உஷா நந்தினி, எஸ்ஐ  சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: