திருக்காட்டுப்பள்ளி, ஏப். 25: திருக்காட்டுப்பள்ளி அருகே வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி கொண்டிருந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே மேகளத்தூர் வெண்ணாற்றில் மணல் கடத்துவதாக தோகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தோகூர் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது மேகளத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள வெண்ணாற்றில் 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டு வண்டிகளையும் சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததுடன் கச்சமங்கலம் மணல் மேட்டுத்தெருவை சேர்ந்த ராஜாராம் (45), மேகளத்தூர் மாதா கோயில் தெருவை சேர்ந்த மார்ட்டின் (38) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவையாறு: திருவையாறு அடுத்த வில்லியநல்லூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜேம்ஸ் மகன் பிரகாஷ் (19). வில்லியநல்லூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி கொண்டு கொள்ளிடம் ஆற்று கரையோரம் வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் ரூபாவதி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினார். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து திருவையாறு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.