காரைக்குடி, ஏப்.25: காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 13க்கும் மேற்பட்ட ஊரணிகள் உள்ளன. பெரும்பாலான ஊரணிகள் போதிய பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் இன்றி காய்ந்து போய் காணப்படுகிறது. தவிர ஊரணியின் உட்புறம் மண் சரிந்து மண் மேடாக காட்சி தருக்கின்றன. இந்நிலையில் நீர்நிலை மேம்பாட்டுக்கு என 3 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதில் பாப்பா ஊரணி, வடக்கு ஊரணி, இடைச்சி ஊரணி, செக்காலை அய்யனார் ஊரணி, பருப்பு ஊரணி ஆகியவை தூர்வாரி, நடைமேடை மற்றும் பூங்கா அமைத்து சுற்றுவேலி அமைக்கப்பட உள்ளது. 1வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு ஊரணி மற்றும் இடைச்சி ஊரணி முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. இதில் நகராட்சி சார்பில் நடைமேடை அமைப்பதற்காக ஊரணியின் உள் அளவை சுருக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிவராமன் கூறுகையில், மூன்றரை ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஊரணி மன்னர் காலத்தில் வெட்டப்பட்டது. இப்பகுதியில் உள்ள 5700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு நீராதாரமாக இந்த ஊரணிதான் உள்ளது. சங்கு சமுத்திர கண்மாய் நிறைந்து இங்குள்ள வடக்கு ஊரணி, இடைச்சி ஊரணி, கிழக்கு ஊரணி நிறையும். இது நிறைந்து புதுவெட்டு கண்மாய் மற்றும் அதல கண்மாய்க்கு சென்று அங்கிருந்து, காரைக்குடி கண்மாய்க்கு செல்லும் வகையில் வரத்து கால்வாய் இருந்தது.