உலக காசநோய் தினம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. காச நோய் பரவுதல், தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ல் உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் உலக காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் தலைமை வகித்தார். துணை இயக்குனர் அஜித்குமார், துணை இயக்குனர் ரவிந்திரன், துணை இயக்குனர் சிவானந்தவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் ஜீவானந்தம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் இரண்டு வாரத்திற்கு மேல் சளி,இருமல் இருந்தால் அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும், சி.பி.என்.ஏ.ஏ.டி என்ற நவீன இயந்திரம் மூலம் எளிதில் காசநோய் கண்டறியலாம், நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்க கூடிய ரூ.1000, ஒன்றிய அரசு வழங்கக் கூடிய ரூ.500 மற்றும் வரும் முன் தடுத்தல், பரவுதல் மற்றும் தடுத்தல் முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு குறித்து கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் ரபீகா கிசாரே நன்றி கூறினார். செய்யது அம்மாள் கலை,அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: