நாமக்கல், ஏப். 24: கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவச சேர்க்கைக்கு, நாமக்கல் மாவட்டத்தில் 173 தனியார் பள்ளிகளில், 2692 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மே 18ம் தேதி கடைசி நாளாகும்.
இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளை சிறுபான்மையற்ற தனியார் பள்ளியில் 25 சதவீத இடங்களுக்கு, கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2013-14ம் கல்வியாண்டு முதல், இச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நேற்று முன்தினம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்குள் இருப்பின், தங்களது வசிப்பிடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில், தங்களது குழந்தைகளை 8ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க வைக்கலாம். இதற்கென www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர், 5 பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.