திருவாரூர், ஏப். 23: திருவாரூரில் மழை காரணமாக பழைய பேரூந்து நிலையத்தில் தேங்கிய சாக்கடை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருந்து வருவதுடன் குளம் குட்டைகளிலும் நீர் வறண்டு வரும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைவதால் போர்வெல்களின் மட்டமும் குறைந்து சரிவர தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுமட்டுமன்றி கோடை வெயில் காரணமாக மேய்ச்சலின்றி கால்நடைகளும் பட்டினியால் வாடி வருகின்றன.இந்நிலையில் தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் கடந்த 19ம் தேதி திருவாரூரில் சுமார் அரை மணி நேரம் வரையில் பலத்த சூறை காற்றுடன் பலத்த மழையும் பெய்தது.