திருவாரூர், ஏப். 23: காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு அதன்படி இதற்கான ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அவ்வாறு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகத்திலுள்ள 3 இடங்களில் இரு இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு காரணமாக தற்போது கடல் பகுதியில் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு இருக்காது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அப்போது கூறியிருந்தார். அந்த விவகாரம் ஓரளவு ஓய்ந்திருந்த நிலையில் அதன்பின்னர் 2வது முறையாக மார்ச் 12ம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிமீ அளவில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிற்கும் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் மேலும் வேதனையை ஏற்படுத்த கூடியதாக உள்ளது.