சென்னை, ஏப்.23: காஞ்சிபுரம் பகுதியில் சூறைக்காற்றுடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதையொட்டி, சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. கோடையின் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரத்தில் நேற்று காலை முதல் கோடை வெயில் கொளுத்தியது. திடீரென மதியம் 2 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென இடி, மின்னலுடன் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், காஞ்சிபுரம் மக்களுக்கு ஒருபுறம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், ஒரு பக்கத்தில் பயத்தையும் ஏற்படுத்தியது. திடீரென சூறைக்காற்று வீசி இடி, மின்னலுடன் மழை பெய்ததால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். ெதாடர்ந்து, அரை மணிநேரம் மிதமான மழை பெய்தது. இதையொட்டி காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், காந்திரோடு, இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக பைக்கில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.