நாகர்கோவில், ஏப்.23 : குமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் விடிய, விடிய பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், ஓரளவு வெப்பம் தணிந்தது. நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக குலசேகரம், திருவட்டார், திற்பரப்பு பகுதிகளில் மழை இருந்தது. பூதப்பாண்டி, அருமநல்லூர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவில் நகரில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மதியத்துக்கு பின் மழைக்கான அறி குறி இருந்தது. லேசான சாரலுடன், குளிர்ந்த காற்றும் இருந்தது. பேச்சிப்பாறை உள்ளிட்ட அணை பகுதிகளிலும் மழை இருந்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகரித்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 2 அடியாக இருந்தது. தொடர்ந்து 1 அடிக்கு கீழ் தண்ணீர் இருந்த நிலையில், நேற்று தான் பேச்சிப்பாறை நீர் மட்டம் 2 அடியாகி இருக்கிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 20.45 அடியாக இருந்தது. சிற்றார்-1ல் 5.38 அடியும், சிற்றார்-2ல் 5.48 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 10.10 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 43.80 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணை 2.45 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.