வேலூர், ஏப்.23: காட்பாடி அருகே சுற்றுலா வேனுடன் தனியார் பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை அடுத்த மேல்வடுகன்குட்டை வெங்கடேசபுரத்தை சேர்ந்த 19 பேர் ஆற்காட்டில் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேனில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாலை 3.15 மணியளவில் வேன் காட்பாடி கிளித்தான்பட்டறை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது குடியாத்தத்தில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த தனியார் பஸ் முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி சென்ற போது, வேன் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் வேனில் வந்த அனைவரும் படுகாயத்துடன் மரண ஓலமிட்டனர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்பாடி போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.