விருதுநகர், ஏப். 23: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் காத்திருப்பு கூடத்தின் அருகே மலை போல குப்பைகள் குவிகின்றன. இவைகளை முறையாக அகற்றாததால், பாம்புகளின் புகலிடமாக மாறி வருகிறது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், முதன்மை கட்டிட வளாகம் முதல் அனைத்து கட்டிட வளாகத்திலும் குப்பைகள் குவிக்கப்படுகின்றன. இவைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலக கட்டிட வளாக பகுதிகள் புதர்மண்டி, கழிவுநீர் தேங்குகிறது. கலெக்டர் அலுவலக முதன்மை வளாக கட்டிடங்கள் மட்டும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால், கருவூலத்துறை, கல்வி மற்றும் சுகாதாரத்துறை கட்டிட வளாகங்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன. இவற்றில் முதன்மை கல்வி அலுவலக மற்றும் சுகாதார அலுவலக வளாக கட்டிடத்தில் கழிப்பறை முதல் வராண்டா பகுதிகளில், மேற்கூரை பல இடங்களில் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் கட்டிடங்களில் மழைநீர் கசிகிறது.