ஆண்டிபட்டி,ஏப்.22: ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கதலிநரசிங்க பெருமாள்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்.11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் முதல் ஒருவாரம் கதலிநரசிங்கபெருமாள் அன்னவாகனம், சிம்மவாகனம், ஆஞ்நேயவாகனம், கருட, ஆதிசேஷன் வாகனம், கஜேந்திர வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் அன்றிலிருந்து மண்டகபடி பூஜைகளும்நாள்தோறும் சுவாமிக்கு நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினர். நேற்றுமுன்தினம் மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உற்சவர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து 18 கிராம முக்கிய பிரதிநிதிகளுக்கு செயல் அலுவலர் மாலை மரியாதை செய்தார்.