திருமங்கலம், ஏப்.22: கப்பலூர் டோல்கேட்டில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட வாட்டர் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக மாறிவருகிறது. திருமங்கலம் அடுத்த கப்பலூரில் டோல்கேட் அமைந்துள்ளது. பொதுவாக டோல்கேட் அமைந்துள்ள பகுதியில் பல்வேறு வசதிகளை டோல்கேட் நிர்வாகம் செய்துதரவேண்டும். கழிப்பறை, பயணிகளுக்கு ஓய்வறை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும் ஆனால் கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் இதில் சில வசதிகளை மட்டும் செய்து கொடுத்துள்ளது. நவீன கழிப்பறை மற்றும் வாட்டர் ஏடிஎம் இயந்திரங்களை அறிமுகம் செய்துவைத்தது. ஆனால் இவை இன்று வரையில் இயக்கத்திற்கு வரவில்லை. தென் தமிழகத்தில் வாட்டர் ஏடிஎம் இந்திரங்களை முதல்முதலில் அறிமுகம் செய்தது கப்பலூர் டோல்கேட்டில் தான். இயந்திரங்கள் வைக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இவை வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. இதனால் டோல்கேட்டினை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அருகேயுள்ள ஓட்டல்கள், உணவங்களில் வாட்டர் பாட்டில்களை வாங்கி செல்கின்றன. இது குறித்து விசாரித்த போது வாட்டர் ஏடிஎம் இயந்திரங்களை இயக்குவதில் சில பிரச்னைகள் உள்ளதால் இதுவரையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை என்றனர் டோல்கேட் ஊழியர்கள்.