கோவில்பட்டி, ஏப். 22: கோவில்பட்டி அருகே மழையுடன் பலத்த காற்று வீசியதில் குலை தள்ளிய நிலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உருளைகுடி கிராமத்தை சேர்ந்த பெரியவேலு மகன் சண்முகராஜ்(45) விவசாயியான இவர் வரதம்பட்டி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் நாட்டு ரக வாழை பயிரிட்டுள்ளார். கிணற்று பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான வாழைகளை வளர்த்து வந்தார். தற்போது வாழைகள் நன்றாக வளர்ந்து குலைகள் வெட்டும் பருவத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கோவில்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் வரதம்பட்டியில் சண்முகராஜ் நிலத்திலிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தன. இதன் சேதமதிப்பு சுமார்ரூ.5 லட்சம் ஆகும். தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று காற்றில் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்டனர்.