புதுக்கடை, ஏப்.21: மார்த்தாண்டம் அருகேயுள்ள ஞாறாம்விளை பகுதியில் தியாகராஜா இசைக்கல்லூரி செயல்படுகிறது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் வயலின், டிரம் மாணவர்களின் அரங்கேற்றம் நடந்தது. விழாவின் துவக்கமாக காலை கல்லூரியின் கிளை மையங்களை சேர்ந்த மாணவ மாணவிகளின் பல்வேறு இசை போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் ஏராளம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதியம் கல்லூரி மூன்றாம் ஆண்டு வயலின் மற்றும் டிரம் மாணவர்களின் அரங்கேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போதகர் மகேர்ஷால் அஸ்பாஸ் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் ஐசக் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதையடுத்து கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஐசக் ஜெபசிங் தலைமை வகித்தார். போதகர் ஐசக் பால்சிங் இறை வேண்டல் செய்தார். கல்லூரி பேராசிரியை இவாஞ்சலின் ஆண்டறிக்கை வாசித்தார். நடைக்காவு பங்குபணியாளர் ராபின்சன் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்- இசை என்பது கடவுளையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இசை தெய்வீகமானது. ஆனால் அனைவருக்கும் பொதுவானது. மனிதனின் இயற்கை சுபாவங்களை மாற்றியமைக்கும் சக்தியும் இசைக்கு உண்டு. அதே வேளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவரையும் தூங்க வைக்கவும் இசையால் முடியும், இசை கடவுளின் அருட்கொடை என்று பேசினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், கல்லூரியின் மேற்கத்திய இசை ஆசிரியர் காட்வின் டென்னிஸ், போதகர் சிறில் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்கலைகழக அளவில் வென்ற மாணவ மாணவிகளுக்கும், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.