பள்ளிபாளையம், ஏப்.19: ஆண்டுக்கு ₹2,500 கோடி மதிப்புள்ள உணவு தானியங்களை சேதப்படுத்தும் எலிகளை பிடித்தால், விவசாய உற்பத்தி அதிகரிக்குமென வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அசோக்குமார் கூறியதாவது:
விவசாய நிலங்களில் காணப்படும் எலிகளால், தானிய உற்பத்தி பெரும் சேதமடைகிறது. சாதாரணமாக ஒரு எலி, தினமும் கால் கிலோ எடையுள்ள உணவு தானியங்களை சாப்பிடுகிறது. இது அதன் உடல் எடையைவிட அதிகம். எலிகள் உண்பதை விட, 30 மடங்கு அதிகமாக தானியங்களை சேதப்படுத்துகிறது. இனப்பெருக்கத்தில் எலிகள் மிகவும் வேகமானவை. சாதாரணமாக ஒரு ஜோடி எலிகள் 18 மாதங்களில் பத்து லட்சமாக பெருகும் தன்மை கொண்டவை. எலிகள் 2 நாட்கள் தண்ணீரே குடிக்காமலும், 7 நாட்கள் உணவு இல்லாமலும் இருக்கும். எலிகளின் பற்கள் வேகமாக வளரும் தன்மை கொண்டவை. மாதம் ஒரு செமீ வீதம், ஆண்டுக்கு 12 செமீ வரை இதன் பற்கள் வளரும். இந்த வளர்ச்சியை தடுக்கவே எலிகள் எப்போதும் எதையாவது கொரித்துக்கொண்டே இருக்கும். எலிகள் கொரிக்காவிட்டால், அதன் பற்கள் வளர்ந்து, எதையும் சாப்பிட முடியாமல் பட்டினியால் மாண்டு போகும்.