மதுரை, ஏப். 19: வாக்குப்பதிவு முடிந்து ஓட்டு பெட்டி இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய, விடிய வந்து சேர்ந்தது. மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் நடந்தது. இத்தொகுதியில் மொத்தம் 1,549 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. 163 மண்டல அதிகாரிகள் தங்களுக்குரிய மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து இரவு 9 மணி முதல் மின்னணு வாக்கு பெட்டிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். இத்தொகுதியில் அடங்கியுள்ள மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய சட்ட மன்ற தொகுதியில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் எடுத்துக்கொண்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு முதல் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரத் துவங்கியன. விடிய விடிய இன்று காலை வரை வாக்கு பெட்டிகள் வந்து சேர்ந்தன. மருத்துவ கல்லூரியில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இடங்களில் ஓட்டு பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டது. இன்று காலை தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீல் வைக்கின்றனர்.