கருங்கல், ஏப்.18: கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சொந்தமான வழிபாட்டு தலம் கருங்கல் கருணை மாதா மலை உச்சியில் அமைந்துள்ளது. தவக்காலத்தின் புனித வெள்ளிக்கிழமையன்று கருங்கல் புனித கருணை மாதா மலைக்கு திருச்சிலுவை திருப்பயணமாக சென்று வழிபடுவது வழக்கம். கடந்த 38 ஆண்டுகளாக இத்திருப்பயணம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 39வது திருச்சிலுவை பயணமானது புனித வெள்ளிக்கிழமையன்று (19ம் தேதி) காலை 7.30 மணிக்கு துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி நடைபெற உள்ளது. துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய விவிலிய பணிக்குழுவினர் இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளையும் தத்ரூபமாக சிலுவை சுமந்து நடித்து செல்வர். ஆலய பாடகர் குழு தலைவர் ஜோ தலைமையில் பக்தியோடு பாடல்கள் பாடி செல்வர்.