ஆம்பூர், ஏப்.18: சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலையொட்டி பிரியாணி மாஸ்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் பல்வேறு பகுதிகளில் மக்களவை தேர்தல் இன்று நடக்க உள்ளது.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் அவர்களின் தொண்டர்களுக்கான உணவு ஏற்பாடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதில் அனைவருக்கும் சுவையான மட்டன், சிக்கன் பிரியாணி வழங்க பல்வேறு தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால், தற்போது ஆம்பூரில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களில் பிரியாணி ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும், ஒரு சில இடங்களில் பிரியாணிகள் தயார் செய்ய உரிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி ஆம்பூரை சேர்ந்த பிரியாணி மாஸ்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.