திருமயம்,ஏப்.16: தேர்தல் கெடுபிடியால் அரிமளம், திருமயம் பகுதியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சற்று குறைவாகவே காணப்பட்டது.தமிழகத்தில் நாளை மறுதினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலலில் உள்ளது. இந்நிலையில் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில்களில் மாசி, பங்குனி திருவிழாக்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பங்குனி விழாக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், வருடத்திற்கு ஒருமுறை வரும் தமிழ் புத்தாண்டும் தேர்தல் விதிமுறைக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக அரிமளம், திருமயம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். வருடம் தோறும் தமிழ்புத்தாண்டின்போது அரிமளம, திருமயம் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒப்புதல் பெற வேண்டும் என கட்டுப்பாடு இருப்பதால் விரக்தியடைந்த விழாக்குழுவினர் கோயில்களில் நடைபெறும் அபிஷேகத்துடன் தமிழ்புத்தாண்டை கொண்டாடி முடித்துவிட்டனர்.