திருவாரூர், ஏப். 16: நாகை எம்.பி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக உட்பட அனைத்து வேட்பாளர்களும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை எம்பி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்வராஜ், அதிமுக சார்பில் சரவணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செங்கொடி, மக்கள் நீதி மையம் சார்பில் குருவையா, நாம் தமிழர் கட்சி சார்பில் மாலதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனிதா மற்றும் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 15 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொது செயலாளர் வைகோ, திக தலைவர் வீரமணி உட்பட பலரும் வாக்கு சேகரித்தனர்.